பிளஸ் 2 தேர்வு அறைக்குள் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் உள்ளிட்டவை கொண்டு செல்வதற்கு தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்
வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறுகிறது.
இத்தேர்வை, மதுரை மாவட்டத்தில் 92 மையங்களில் 37,863 மாணவ, மாணவியர்
எழுதுகின்றனர்.
கடந்தாண்டு, மதுரை மத்திய சிறையில் பிளஸ் 2
தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 9 சிறைவாசிகள் மட்டுமே
தேர்வெழுதுவதால், அங்கு தேர்வு மையம் அமைக்கப்படவில்லை.
மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வுக்கான நடவடிக்கை குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ. ஆஞ்சலோ இருதயசாமி வியாழக்கிழமை கூறியதாவது:
தனித்தேர்வர்கள் தவிர, பள்ளி மாணவர்களுக்கான
தேர்வறை அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) அந்தந்தப் பள்ளிகளிலேயே
வைக்கப்பட்டு, தேர்வின்போது மாணவர்களிடம் அளிக்கப்படும்.
தேர்வறைக்குள் மாணவர்கள் இரு சாதாரண பேனாக்கள்,
பென்சில், ரப்பர், ஸ்கேல் ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம். எலக்ட்ரானிக்ஸ்
பேனா, எலக்ட்ரானிக்ஸ் கடிகாரம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கால்குலேட்டர்
உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் செல்லக்கூடாது.
கணித இயற்பியல், கணக்கியல் பாடத் தேர்வுக்கு
மட்டும் சாதாரண கால்குலேட்டரை தேர்வறைக்குள் எடுத்துச் செல்லலாம். அச்சிட்ட
அல்லது எழுதிய தாள்களை உள்ளே எடுத்துச் செல்லக்கூடாது.
தேர்வறைகளில் தலா 2 போலீஸார் அல்லது காவல்துறை
சார்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். சிறப்பு கண்காணிப்புப் படைகள்
தவிர்த்து, தேர்வறை ஒன்றுக்கு தலா 2 பேர் கொண்ட தனிப்படையினர்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு அறைகளில் தேவையான வெளிச்சம்
இருக்குமாறும், மின்சார வசதியை உறுதிசெய்யுமாறும் பள்ளித் தலைமை
ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.