தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுகலைபட்டதாரி
ஆசிரியர்கள் சங்கம், சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி
மாவட்டத்தில் பல பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை. தமிழக அரசின்
உத்தரவின்படி 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். ஆனால், பல
பள்ளிகளில் 120 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் பாடம் நடத்துகின்றனர். இதனால்
மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் கல்வித் தரம்
பாதிக்கப்படுவதுடன், பாடம் குறித்த தெளிவான விவரங்கள் மாணவர்களுக்கு
தெரியவில்லை.
கிருஷ்ணகிரியில் ஒரு
பள்ளியில் 1,500 மாணவர்களுக்கு கணக்கு பாடத்தை வணிகவியல் ஆசிரியர் சொல்லிக்
கொடுக்கிறார். ஆங்கிலப் பாடம் சொல்லிக் கொடுக்க 2 ஆசியர்கள் மட்டுமே
உள்ளனர். எனவே, தமிழகம் முழுவதும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை
விரைவாக நிரப்பவேண்டும் என்று தமிழக அரசுக்கு எங்கள் சங்கம் கோரிக்கை
மனுக்களை அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இவ்வாறு அதில்
கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு தலைமை
நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு
விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘மனுதாரர் சங்கம் கொடுத்த
கோரிக்கை மனுவை 2 மாதத்துக்குள் விசாரித்து, தகுந்த உத்தரவினை தமிழக அரசு
பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் விவரங்களை,
மனுதாரர் அமைப்புக்கு அரசு தெரியப்படுத்த வேண்டும்’ என்று
உத்தரவிட்டுள்ளனர்.