news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Saturday 14 May 2016

மே 17ல் பிளஸ் 2 முடிவுகள், மே 19ல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

 தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centre), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

*தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்*

வரும் 19ம் தேதி முதல் பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் 21.05.2016 முதல் தேர்வர்கள் தாங்கள் பயின்ற/தேர்வெழுதிய பள்ளி/மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழைபெற்றுக் கொள்ளலாம்.

*விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:*

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் 17.05.2016 மற்றும் 18.05.2016 ஆகிய இரு நாட்களில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.

விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல் / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

*விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம்:*

பகுதி - 1 மொழி - ரூ.550/-

பகுதி - 2 மொழி (ஆங்கிலம்) - ரூ.550/-

ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.275/-

மறுகூட்டல் கட்டணம்

பகுதி - 1 மொழி, பகுதி - 2 மொழி (ஆங்கிலம்) மற்றும் உயிரியல் ஒவ்வொன்றிற்கும் - ரூ.305/-

ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205/-

*பணம் செலுத்தும் முறை:*

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.

*விடைத்தாள் நகல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் முறை:*

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் இயலும்.

விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும்.

*மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வுகள், ஜூன் 2016:*

மார்ச் / ஏப்ரல் 2016-ல் நடைபெற்ற மேல்நிலைப் பொதுத்தேர்வில் தேர்வெழுத பதிவு செய்து, தேர்ச்சி பெறாதோருக்கும் / வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும்.