பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்
பணிகள் மார்ச் 16-ஆம் தேதி முதல்
தொடங்கப்பட உள்ளன.
இதற்காக தமிழகம் முழுவதும் 66 விடைத்தாள் திருத்தும் மையங்கள்
அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 40 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட
உள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கியது. இந்தத்
தேர்வை 2,377 மையங்களில்
தனித்தேர்வர்கள் 42 ஆயிரம் பேர் உள்பட மொத்தம்
8.86 லட்சம் மாணவர்கள்
எழுதுகின்றனர்.
தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான
தேர்வுகள் வெள்ளிக்கிழமையோடு நிறைவடைந்தன. இந்த இரண்டு தாள்களுக்குரிய
விடைத்தாள்கள் தேர்வு மையங்களிலிருந்து, அந்தந்த கல்வி
மாவட்டங்களில் உள்ள விடைத்தாள் காப்பு மையங்களுக்கு பாதுகாப்புடன்
எடுத்துச்செல்லப்பட்டன.
அடுத்த வாரத்தில்
விடைத்தாள்கள் இந்த மையங்களிலிருந்து விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களுக்கும் உரிய
பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட உள்ளன.
மொழிப்பாடங்கள் உள்பட
அனைத்துப் பாடங்களுக்கான விடைத்தாள்களும் வெவ்வேறு மாவட்டங்களுக்குக்
கொண்டுசெல்லப்பட்டு திருத்தப்பட உள்ளன.
விடைத்தாள் திருத்துவது
தொடர்பாக அதிகாரிகள் கூறியது:
இந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 16-இல் தொடங்கப்பட உள்ளன. ஒரு கல்வி மாவட்டத்துக்கு ஒரு மையம் வீதம் 66 மையங்கள் அமைக்கப்பட உள்ளன.