news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Tuesday 22 August 2017

இன்று (22-ந்தேதி) தமிழகம் முழுவதும் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.




தமிழ்நாடு முழுவதும் இன்று 12 லட்சம் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்குபின் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் 5 லட்சம் தமிழக அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் இணைக்கப்பட்டு உள்ளனர். இதற்காக மாதந்தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.

இதுவரை பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ.18,300 கோடி. மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையத்திடம் தமிழக அரசு ஒப்படைக்கவில்லை. இதனால் ஓய்வூதிய பலன்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கிடைக்கவில்லை.

இதை கண்டித்து ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பு சார்பில் கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 5-ந்தேதி 60 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில் இன்று (22-ந்தேதி) தமிழகம் முழுவதும் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் நடந்த இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 12 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை இல்லாததால் வகுப்புகள் நடைபெறவில்லை. மாணவர்கள் பாடம் படிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் இன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

தமிழக அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். புதிய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று முழக்கமிட்டார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தால் நுங்கம்பாக்கம் சாலை முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டம் குறித்து ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோவன், கணேசன் ஆகியோர் கூறியதாவது:-

எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு இதுவரை தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. எங்களை அழைத்து பேச்சு வார்த்தை கூட நடத்தவில்லை.

இதனால் தமிழகம் முழுவதும் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அரசு பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளன. பள்ளிகள் செயல்படவில்லை.

அடுத்த கட்டமாக செப்டம்பர் 7-ந்தேதி காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். தொடர் வேலை நிறுத்த போராட்டத்தின்போது ஆர்ப்பாட்டம், மறியல், சிறை செல்லும் போராட்டம் என தினமும் போராட்டங்களை நடத்துவோம்.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். தமிழக அரசு எங்களது நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.