news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Tuesday 21 November 2017

அரசு பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கான புதிய வரைவு பாடத்திட்டம்: முதல்வர் வெளியிட்டார்

 தமிழக அரசு பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை உள்ள வகுப்புகளுக்கான புதிய வரைவு பாடத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். தமிழக பள்ளி கல்வி துறையில் கடந்த 12 ஆண்டுகளாக பாடதிட்டம் மாற்றியமைக்கப்படவில்லை. இதையடுத்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்க முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் வல்லுநர் குழு ஒன்றை அரசு அமைத்தது. அந்த குழு தமிழகத்தில் 5 இடங்களில் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தியது. இதையடுத்து புதிய வரைவு பாடத்திட்டத்தை அக்குழு உருவாக்கி உள்ளது. வரைவு பாடத்திட்டம் 2 புத்தகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்த புதிய வரைவு பாடதிட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார். அப்போது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன், பள்ளிக் கல்வி துறை இயக்குநர் இளங்கோவன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அறிவொளி, பாடத்திட்ட தயாரிப்பு குழு தலைவரும் முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன், முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, மற்றும் அந்த குழுவில் இடம் பெற்றுள்ள கல்வியாளர்கள் உடன் இருந்தனர். இதன் பின்னர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:  பள்ளிக் கல்வியில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. அதற்காக அமைக்கப்பட்ட குழு கடந்த 4 மாதங்களில் இந்த பணியை முடித்துள்ளது.

 இக்குழுவினர் தமிழகத்தில் மதுரை, கோவை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சென்னை ஆகிய இடங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினர். அங்கு தெரிவித்த கருத்துகளை பரிசீலித்து இப்போது புதிய வரைவு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரைவு பாடத்திட்டம் இணைய தளத்தில் வெளியிடப்படும். 15 நாட்களில் பொதுமக்கள், கல்வியாளர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கலாம். அதற்கு பிறகு அந்த கருத்துகளை பரிசீலிக்க குழு அமைக்கப்பட்டு கருத்துகள் ஆய்வு செய்யப்படும். அதில் சிறந்த கருத்துகள் ஏற்கப்பட்டு தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் சிறு புத்தக வடிவில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும். அடுத்த  கல்வி ஆண்டில் 1, 2, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரும்.

இந்த புதிய பாடத்திட்டத்தை உருவாக்க 3 ஆண்டுகள் இலக்கு வைக்கப்பட்டது. ஆனால் விரைவாக முடிக்க முடியும். மற்ற வகுப்புகளுக்கு 2019-2020 கல்வி ஆண்டில் அடுத்த பாடத்திட்டம் கொண்டு வரப்படும். மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து பொதுத் தேர்வுகளையும் மாணவர்கள் சந்திக்கும் வ கையில் பாடத்திட்டத்தில் கருத்துகள் சேர்க்கப்படும். அதை நடத்துகின்ற அளவுக்கு ஆசிரியர்களுக்கு பயிற்சியும் கையேடும் வழங்கப்படும்.  இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 
புதிய பாடத்திட்டத்தைபார்வையிட கருத்துப்பதிவிட  இந்த இணைய முகவரிக்கு செல்லவும் 
http://tnscert.org/webapp2/tn17syllabus.aspx