news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Sunday 2 August 2015

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் ஆதரவு தெரிவித்தனர்.

சென்னையில் நேற்று ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு இணைந்து போராட தயாராக இருப்பதாகவும் அறிவித்தனர்.
தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான 'ஜேக்டோ' சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடந்த உண்ணாவிரதத்தை தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். போராட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர்.ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா மாலையில் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
 


 

உண்ணாவிரத போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பேசியதாவது:
ஸ்டாலின் - தி.மு.க., இந்தப் போராட்டத்திற்கு என்னை அழைத்தால் உங்கள் கோரிக்கை சேரவேண்டிய இடத்தில் சேரும்; பரிகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அழைத்துள்ளீர்கள்.இந்த ஆட்சியில் மக்கள் நலப் பணியாளர்கள் சாலைப் பணியாளர்கள் சத்துணவுப் பணியாளர்கள் மாற்றுத் திறனாளிகள் என பலரும் போராடி வருகின்றனர். எந்த போராட்டத்தையும் ஆட்சியாளர் கண்டு கொள்வதில்லை.உங்கள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அடுத்து வரும் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உங்களின் போராட்டத்திற்கு உரிய மரியாதை மதிப்பு கிடைக்கும் என உறுதி அளிக்கிறேன்.

ரா.முத்தரசன் இந்திய கம்யூனிஸ்டு “ஆசிரியர்கள் யாருக்காகவும் காத்திருக்காமல் தங்கள் கோரிக்கைகளுக்காக ஒன்றாக இணைந்து தொடர்ந்து போராடவேண்டும்” என்றார்.

ஞானசேகரன் - த.மா.கா., ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற த.மா.கா. குரல் கொடுக்கும்.
ரங்கராஜன் - மா.கம்யூ., ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை; அவற்றை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தற்போது ஆங்கில பள்ளி மோகம் உள்ளது. இதை தடுக்க அரசு அங்கன்வாடி மையங்களை முன் பருவ முதல் ஆண்டு முன் பருவ இரண்டாம் ஆண்டு என முதல் வகுப்புக்கு முந்தைய வகுப்புகள் நடத்தும் பள்ளிகளாக மாற்ற வேண்டும்.
ராமதாஸ் - பா.ம.க.,நாங்கள் ஆளுங்கட்சி அல்ல; ஆண்ட கட்சியும் அல்ல. ஆண்ட கட்சியாக இருந்தால் ஆட்சியில் இருந்த போது ஏன் செய்யவில்லை என கேட்பீர்கள். உங்கள் கோரிக்கையை ஆளுங்கட்சியும் ஆண்ட கட்சியும் நிறைவேற்றப் போவதில்லை.உங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டுமானால் மாற்றம் தேவை. நான் பிரசாரத்திற்காக இதை சொல்லவில்லை; உண்மையை சொல்கிறேன்.
மாற்றம் நடந்தால் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் தீர்க்கப்படும். நீங்கள் நினைத்தால் மாற்றத்தை உருவாக்க முடியும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேற நீங்கள் எத்தகைய போராட்டத்தை தேர்வு செய்தாலும் எங்களுடைய முழு ஆதரவு உண்டு.
தொல்.திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் : ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை தமிழக அரசு உடனடியாகக் களைய வேண்டும். மத்திய அரசின் பாடத்திட்டத்திலோ, ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதத்திலோ, எதிலும் முரண்பாடு இருக்கக் கூடாது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
தமிழிசை - பா.ஜ.,அறிவுப் பசியை நீக்கும் ஆசிரியர்கள் பசியால் வாடக்கூடாது. நீங்கள் பசியால் வாடுவதை தமிழக அரசு வேண்டுமானால் பொறுத்துக் கொள்ளலாம்; எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.உங்கள் போராட்டம் அரசுக்கு ஒரு படிப்பினையை ஏற்படுத்தும். உங்கள் கோரிக்கை நிறைவேறும். அதற்கு உங்களுடன் சேர்ந்து குரல் கொடுக்க பா.ஜ. தயாராக உள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலர் தமிழ் செல்வி: 'ஜேக்டோ' அமைப்புடன் 'ஜியோ' அமைப்பும் இணைந்து விட்டது. அரசு ஊழியர்களும் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். எனவே இதை பொது போராட்டமாக்க வேண்டுமா என முதல்வர் சிந்திக்க வேண்டும். உடனடியாக கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து 10 சதவீதத் தொகையை பிடித்தனர்.அந்தத் தொகையுடன் மாநில அரசு 10 சதவீதத் தொகையை செலுத்த வேண்டும். ஆனால் அந்த பணத்தை தமிழக அரசு களவாடிக் கொண்டது. அந்த பணத்தை அரசு உடனடியாக திரும்பத் தரவேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசின
ர்.