news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Monday 25 September 2017

மதுரை டி.இ.ஓ., அலுவலகத்தை பிரிப்பது எப்போது: 10 ஆண்டுகளாக கிடப்பிலுள்ளது திட்டம்

மதுரை:மதுரையில் அதிக எண்ணிக்கையில் பள்ளிகள் கொண்ட மதுரை கல்வி மாவட்டத்தை (டி.இ.ஓ.,) இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற திட்டம் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.மதுரையில் 1939ல் உருவாக்கப்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை முதன்மை கல்வி அலுவலகம், 1985ல் திண்டுக்கல், 1997ல் தேனி முதன்மை கல்வி அலுவலகங்களாக பிரிக்கப்பட்டன.
இதையடுத்து மதுரை வருவாய் கல்வி மாவட்டம் அளவில் உள்ளதை நிர்வாக வசதிக்காக 13.2.1995ல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், 29.8.1960ல் உசிலம்பட்டி டி.இ.ஓ., 14.9.1985ல் மேலுார் டி.இ.ஓ., மற்றும் 8.2.1995ல் மதுரை டி.இ.ஓ., அலுவலகங்களாக பிரிக்கப்பட்டன.மதுரை நகர் வளர்ச்சியடைந்ததன் காரணமாக பள்ளிகளின் எண்ணிக்கையும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்தன. தற்போது மூன்று கல்வி மாவட்டங்களில் மொத்தமுள்ள பள்ளிகளின் எண்ணிக்கையில் 50 சதவீதம் மதுரை டி.இ.ஓ.,வின் கீழ் செயல்படுகின்றன. அதாவது 534 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 220க்கும் மேற்பட்ட பள்ளிகள் மதுரை டி.இ.ஓ.,விற்கு உள்ளது.அரசு உதவிபெறும் பள்ளிகளின் எண்ணிக்கையும் இங்கு அதிகம். அதேநேரம் உசிலம்பட்டி - 121, மேலுார் -189 பள்ளிகள் உள்ளன. ஆனால் மூன்று டி.இ.ஓ., அலுவலகங்களிலும் பணியாளர்கள் ஒரே விகிதத்தில் தான் உள்ளன.
இதனால் பள்ளி ஆய்வுகள் அதிகாரிகளுக்கு சவாலாகவும், நிர்வாக ரீதியிலான பணிகள் அலுவலர்களுக்கு சுமையாகவும் உள்ளன.இதை கருத்தில் கொண்டு தான் பத்து ஆண்டுகளுக்கு முன் பாண்டுரங்கன் சி.இ.ஓ.,வாக இருந்தபோது மதுரை டி.இ.ஓ., அலுவலகத்தை இரண்டாக பிரிக்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாவட்டத்தில் 15 கல்வி ஒன்றியங்களில் பெரிய ஒன்றியங்களான அலங்காநல்லுார், வாடிப்பட்டி, திருப்பரங்குன்றம் மதுரையின் கீழ் உள்ளன. மாணவர்கள் எண்ணிக்கையும் இங்கு அதிகம். இதை இரண்டாக பிரித்தால் மட்டுமே கற்றல் கற்பித்தல், பள்ளி ஆய்வுகள் பணிகள் சீராகவும், நிர்வாக பணிகள் சிறப்பாக மேற்கொள்ள முடியும்," என்றார்.